
மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரபலமான ஹோட்டல் உள்ளது. கடந்த பிப்ரவரி 6-ம் தேதி அன்று கார் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு, 4 வயது சிறுவன் தனது தந்தையுடன் ஹோட்டலுக்குள் செல்ல வேகமாக ஓடி வந்தார். அப்போது வெளியே இருந்து ஹோட்டலுக்குள் நுழைந்த கார், அச்சிறுவன் மீது ஏறி இறங்கியது.
இதில் படுகாயமடைந்த சிறுவனை அவரது தந்தை மற்றும் ஹோட்டல் பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி-யில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கு காரணமான ஓட்டுனரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .