
உலகம் முழுவதும் இரத்த தானம் ஒரு முக்கியமான மருத்துவ தேவையாக இருக்கிறது. ஆனால், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் போதுமான இரத்தம் கிடைப்பது கடினம். இந்நிலையில், ஜப்பானில் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான குழு, எந்த இரத்த வகையினருக்கும் பொருந்தும் செயற்கை இரத்தத்தை உருவாக்கி இருக்கின்றது.
இந்த செயற்கை இரத்தம், தானம் செய்யப்பட்ட இரத்தத்திலிருந்து ஹீமோகுளோபின் என்ற இரும்புச்சத்து கொண்ட புரதத்தை பிரித்தெடுத்து, வழக்கமான வைரஸ் இல்லாத பாதுகாப்பான ஷெல்லில் அடைத்து உருவாக்கப்படுகிறது. இதில் இரத்த வகை இல்லாததால், பயனாளிக்கு பொருந்துகிறதா என்ற சோதனை தேவையில்லை.

அறை வெப்பத்தில் 2 ஆண்டுகள், குளிர்சாதனத்தில் 5 ஆண்டுகள் வரை இதை சேமிக்க முடியும். இது தற்போதைய சிவப்பு இரத்த அணுக்களைவிட (42 நாட்கள்) பெரிய முன்னேற்றமாக இருக்கிறது.
மனித சோதனைகள் ஆரம்பம்:
2022ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சோதனையில், 20-50 வயதுக்குள் உள்ள ஆண் தன்னார்வலர்களுக்கு 100 மில்லிலிட்டர் வரை செயற்கை இரத்தம் நரம்பு வழியாக அளிக்கப்பட்டது. சிறிய பக்க விளைவுகள் இருந்தாலும், முக்கிய உடல்நிலை பாதிப்புகள் ஏதும் இல்லை.
இதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதத்தில் 400 மில்லிலிட்டர் வரை அளவுகளை அதிகரித்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பக்கவிளைவுகள் இல்லாமல் இருந்தால், 2030ம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கே கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், சுவோ பல்கலைக்கழக பேராசிரியர் டெருயுகி கோமாட்சு, இரத்த அழுத்தம், பக்கவாதம், மற்றும் இரத்தக் கசிவு சிகிச்சைக்காக ஆல்புமின்-பொதிக்கப்பட்ட ஹீமோகுளோபின் அடிப்படையிலான செயற்கை ஆக்ஸிஜன் கேரியர்களை உருவாக்கி வருகிறார். விலங்கு சோதனைகளில் நல்ல முடிவுகள் கிடைத்ததால், தற்போது மனித சோதனைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள், உலக அளவில் இரத்த பற்றாக்குறையை தீர்க்கும் புதிய வழிகளைத் திறக்கும் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.