உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வீசி வரும் கடும் புயல் காற்றால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், பரேலி நகரில் பலத்த காற்றின் காரணமாகத் தொழிலாளி ஒருவர் தகரக் கூரையுடன் காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரேலியின் பாபியானா கிராமத்தைச் சேர்ந்த நன்னே மியான் என்ற தொழிலாளி, கடந்த புதன்கிழமை அன்று கடும் புயல் வீசியபோது தனது வீட்டின் தகரக் கூரையைப் பலமாகப் பிடித்துக் கொண்டிருந்தார். காற்றின் வேகம் அதிகரித்ததால், எதிர்பாராத விதமாகத் தகரக் கூரை பெயர்ந்து மேலே எழும்பியது. அப்போது அந்தக் கூரையைத் தாங்கி நின்ற தூணில் சாய்ந்திருந்த நன்னே மியானும், கூரையோடு சேர்ந்து காற்றில் தூக்கி வீசப்பட்டார்.

இந்த விபத்து குறித்து நன்னே மியான் கூறுகையில், “காற்று பலமாக வீசியபோது தகரக் கூரையைப் பிடித்துக் கொள்ள முயன்றேன். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் கூரையுடன் சேர்ந்து நானும் காற்றில் பறந்தேன். சுமார் 80 அடி தூரத்தில் இருந்த ஒரு சோளக் காட்டு வயலில் விழுந்தேன். தண்ணீர் நிறைந்த அந்த வயல் சேற்றில் நான் சிக்கிக் கொண்டபோது, அங்கிருந்த ஒருவர் என்னைக் காப்பாற்றி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ வைரலான நிலையில், பரேலி டிஎஸ்பி நிதின் குமார் விளக்கம் அளித்துள்ளார். “தொழிலாளி காற்றில் பறப்பது போன்ற வீடியோ உண்மையானதுதான். ஆனால், அதில் கூடுதல் ‘டிராமா’ விளைவுகளுக்காக சில எடிட்டிங் வேலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தில் நன்னே மியானின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.

படுகாயமடைந்துள்ள நன்னே மியான், தனது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரம் தான்தான் என்றும், கையில் ஏற்பட்டுள்ள பலத்த காயம் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். இதுவரை எந்த அரசு அதிகாரியும் தன்னைச் சந்திக்கவில்லை எனக் கூறிய அவர், தனது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் நிலவும் இந்தச் சீரற்ற வானிலையினால் இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளதாகத் துயரச் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.