OPEN AI-யின் CHATGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்து பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது நாட்டின் கடினமான தேர்வாக கருதப்படும் JEE ADVANCED தேர்வு எழுதிய CHATGPT 360 க்கு 327 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இது அகில இந்திய அளவில் நான்காவது இடத்தை பிடித்தது. இந்த JEE ADVANCED தேர்வு என்பது இந்தியாவில் மிகவும் கடினமான பொறியியல் நுழைவு தேர்வுகளில் ஒன்றாகும்.

 

இது இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களான ஐஐடிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவாயிலாகும். அப்படி இருக்கையில் ஐஐடி காரக்பூரைச் சேர்ந்த பொறியாளரான அனுஷ்கா ஆஷ்வி என்பவர் இந்த சுவாரஸ்யமான சோதனையை மேற்கொண்டுள்ளார். அதாவது அவர் 2025 ஆம் ஆண்டு JEE ADVANCED மாதிரி தேர்வு ஒன்றை CHATGPT மூலம் வினாத்தாளை கொடுத்து சோதித்துள்ளார்.

குறிப்பாக அவர் CHATGPT-யை JEE தேர்வாளர் போல செயல்படவும், இணைய தேடல்கள், குறியீட்டு கருவிகள் அல்லது குறிப்புகள் இல்லாமல் ஒவ்வொரு கேள்வியையும் சுயமாக தீர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார். அந்த ஆணையின்படி CHATGPT தேர்வு எழுதியதை பார்த்து, பல ஆண்டுகள் பயிற்சி செய்யும் மாணவர்களை போலவே விடைகளை எழுதுவதாக ஆச்சரியமடைந்தார்.