மும்பையின் புறநகர் பகுதியான காட் கோபரில் வசித்து வரும் விஷால் நாங்க்ரே (32)  கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கல்பனா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கல்பனா  ஒரு உணவு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 18-ஆம் தேதி இவர்களுடைய திருமண நாள் வந்திருக்கிறது. ஆனால் விஷால் தனது திருமண நாளை மறந்து விட்டதால் அவரது மனைவி கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கல்பனா அவரிடம் சண்டை போட்டுள்ளார் இதனையடுத்து மறுநாள் வேலைக்கு சென்று விட்டு கல்பனா வீடு திரும்பிய போது விஷால் தனது வாகனத்தை கழுவிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்து மேலும் கோபமடைந்த கல்பனா அவரிடம் சண்டையிட்டது மட்டுமல்லாமல் கல்பனா தனது பெற்றோர் மற்றும் சகோதரரை உடனடியாக வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த அவரது குடும்பத்தினர் விஷாலிடம் சண்டை போட்டு அவரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து விஷாலின் தாயார் வீட்டிற்கு சென்ற அவர்கள் விஷால் மற்றும் அவரது தாயாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது விஷால் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்  இந்திய சட்ட பிரிவுகள் 323, 324, 327, 504 506 மற்றும் 34 இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.