
திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையைச் சேர்ந்த சசி என்பவரை, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டார். அந்த நபர், சசியிடம் புகைப்படங்களுக்கு லைக் கொடுத்தால் பணம் தருவதாகக் கூறினார். இதை நம்பிய சசி, புகைப்படங்களுக்கு லைக் கொடுத்து முதல் கட்டமாக ரூ.320 பெற்றார்.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ஆம் தேதி, சசியிடம் மீண்டும் அந்த நபர் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்கி, குறிப்பிட்ட இணைப்பை அனுப்பினார். அந்த இணைப்பில் சென்று தனக்கென பயனர் முகவரியும் உள்நுழைவுக் குறியீடும் உருவாக்கி, சிறிய தொகையை முதலீடு செய்தார். இதற்குப் பிறகு, ரூ.1,000 முதலீடு செய்த சசி, அதற்கு ஈடாக ரூ.1,300 திரும்பப் பெற்றார்.
இதனால் சசி மேலும் 13 தவணைகளில் அந்த நபரின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு தனது வங்கி மற்றும் உறவினா்களின் வங்கிக் கணக்குகளின் மூலம், ஜி-பே மற்றும் இணையவழி வங்கிச் சேவை மூலம் மொத்தம் ரூ.6.24 லட்சம் அனுப்பினார். ஆனால் அந்த பணம் திரும்பி வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சசி, விழுப்புரம் இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதை தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.