பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டியை வருகிற 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று அறிவித்தது.

13 லீக் ஆட்டங்கள் மற்றும்  இறுதிப்போட்டி உட்பட 4 பிளே ஆப் சுற்றி என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. புதிய அட்டவணையின் படி 2 நாளில் இரு ஆட்டங்கள் இடம் பெறுகிறது. மே 29ஆம் தேதி இறுதி போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30ஆம் தேதி வெளியேறுதல் சுற்றும், ஜூன் 1-ம் தேதி இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.

முந்தைய அட்டவணையை ஒப்பிடும்போது 9 நாட்கள் கூடுதலாக ஆட்டம் நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்த எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீதம்  இருக்கும் போட்டிகளில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்பதால் மாற்று வீரர்களை இணைக்க ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இணைக்கப்படும் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட முடியும். 2026 ஐபிஎல் தொடரில் விளையாட அவர்கள் தகுதியற்றவர்களே என்று தெரிவித்துள்ளனர்.