உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், சுமர் சாகர் பகுதியில் மின்விநியோக பணிகளை செய்துகொண்டிருந்த லைன்மேன் ஒருவர் மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாஸ்திரி சௌக் துணை மையத்தில் RDSS திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் நடத்திய பணி நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. லைன்மேனாக பணியாற்றிய சஞ்சய் குமார், அம்ரோஹாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் போது, மின் கம்பியை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சஞ்சய் குமார், எதிர்பாராதவிதமாக கம்பியில் சென்ற மின்சாரத்தைத் கவனிக்காமல் தொட்டதால்  தீக்காயம் அடைந்தார். இதனையடுத்து கம்பியில் சிக்கி துடித்த அவரை கீழே இறக்கும் நடவடிக்கையில் கவனக்குறைவு ஏற்பட்டது.

அதாவது ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் தனியாகவே ஏணியை வைத்து அவரை காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் அவர் சஞ்சயின் கையை இழுத்தபோது, சஞ்சய் தரையில் வேகமாக விழுந்து மேலும் காயமடைந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, வர்த்தக சபைத் தலைவர் சஞ்சய் சிங்கானியா, மின்சாரக் கழகத்தையும், ஒப்பந்த நிறுவனத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். லைன்மேன் பாதுகாப்பு கருவிகள் இன்றி வேலை செய்தது, பணிநிறுத்தம் இருந்தபோதும் பணி தொடரப்பட்டது என்பவை முக்கிய குற்றச்சாட்டுகளாக உள்ளன.

இச்சம்பவத்துக்குப் பிறகு மின்சார கழகம் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. காயமடைந்த லைன்மேன் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.