
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், திமுக எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாநிலத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விரிவாக தெரிவித்தார். “தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இணையதளம் மற்றும் தொலைபேசி மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். திமுக ஆட்சி அமைந்த பிறகு, 3,000-க்கும் மேற்பட்ட புதிய நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
மேலும், தற்போது வரை 18,09,677 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், மொத்தம் 2,25,59,224 குடும்ப அட்டைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில், 51,327 புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில், 1,67,795 புதிய குடும்ப அட்டைக்கு வந்துள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அவையும் விரைவில் முடிவிற்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்தார்.