கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சி தரும் ஒரு போலி கொலை வழக்கு தற்போதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனைவியைக் கொன்றதாகக் கூறி சுரேஷ் என்ற நபர் 1.5 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். ஆனால் உண்மையில், அவருடைய மனைவி மல்லிகே  உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைஅடுத்து, சுரேஷ் தற்போது கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ரூ.5 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, மைசூரு அருகே உள்ள பசவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த குருபர சுரேஷ் மீது, தனது மனைவி மல்லிகையை கொலை செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு, அருகிலுள்ள பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு, மல்லிகேயுடையதாகக் கருதப்பட்டது. ஆனால், எந்தவிதமான டிஎன்ஏ பரிசோதனையும் செய்யப்படவில்லை. அதனைக் கொண்டு வழக்கை நிலைநாட்டிய போலீசார், சுரேஷை சிறையில் அடைத்தனர்.

ஆனால் 2023-இல், அதே மனைவி, ஒரு உணவகத்தில் சாப்பிடுவதை ஒருவர் பார்த்து புகாரளித்ததின் அடிப்படையில், மல்லிகே உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 2025 ஏப்ரலில், மைசூர் அமர்வு நீதிமன்றம் சுரேஷை நிரபராதி என விடுதலை செய்தது. போலீசாரின் தவறான நடவடிக்கையால் தன்னை பலிகடா ஆக்கியதாகக் கூறும் சுரேஷ், தற்போது ₹5 கோடி இழப்பீடுக்கு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் பி.ஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் யதிமணி மற்றும் மகேஷ், ஏஎஸ்ஐ சோமசேகர் உள்ளிட்ட 5 போலீசார்மீது தவறான வழக்கு தொடர்ந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி ஆதாரங்களைச் சமர்ப்பித்து  தன்னை கொலையாளியாக மாற்றியதாகவும் சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் போலீசார் தேவையான சோதனைகளை செய்யாமல், தன்னிடம் ஒத்துழைப்பு தர வற்புறுத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் கூறியதாவது, “நான் என்னை நிரபராதி என நிரூபிக்க போராட வேண்டிய நிலைக்கு வந்தேன். என் குடும்ப வாழ்க்கை நாசமாயிற்று. அரசு வழங்கிய ₹1 லட்சம் எனக்கு பரிசாக இல்ல, வெறுமனே அவமானமாக இருக்கிறது” என்றார். தற்போது இந்த வழக்கு நாடு முழுவதும் நீதிமுறை அமைப்பிலும், காவல் துறையின் செயல்முறையிலும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறது.