இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தகுதி பெற்றதை அடுத்து, கர்நாடக ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது. இதற்கிடையே, ஆர்சிபி வெற்றி பெற்றால் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியுள்ளது.

பெலகாவி மாவட்டம் கோகாக்கைச் சேர்ந்த சிவானந்த மல்லன்னவர் என்ற ஆர்சிபி ரசிகர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில், “ஆர்சிபி அணி IPL கோப்பையை வென்றால், அந்த நாளை ‘ஆர்சிபி ரசிகர்கள் தினம்’ என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, வருடந்தோறும் அந்த நாளை விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இத்துடன், அரசின் ஆதரவுடன் மாவட்டங்களிலும் விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

RCB அணியின் இறுதிப் போட்டி நுழைவு பலருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை RCB இறுதிப்போட்டிக்கு சென்றது. 2025 இல், ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு RCB மீண்டும் இந்த சாதனையை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய RCB அணி, அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்காக தகுதி பெற்றுள்ளது. இதனிடையே, ரசிகரின் கடித படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.