
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் நெல்லிக்கட்டை பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக் (26). இவருக்கு நுசைபா (21) என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருமே இன்ஸ்டாகிராம் மூலம் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் அப்துல் ரசாக், சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நுசைபாவின் தந்தைக்கு கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.
இதில் நுசைபாவை “முத்தலாக்” செய்வதாக மூன்று முறை வாட்ஸ்அப்பில் குரல் பதிவு செய்து அனுப்பியுள்ளார். இதனைக் கேட்ட தந்தை அதிர்ச்சி அடைந்து நுசைபாவிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நுசைபா கணவர் மீது காசர்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்தபின் முதல்முறையாக இந்த குற்றச்சாட்டு வந்துள்ளது.
எனவே காவல்துறையினர் நுசைபாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து அப்துல் ரசாக் வெளிநாட்டில் உள்ளதால் அவரது தாய் மற்றும் சகோதரியை குற்றவாளியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.