மும்பையை அடுத்துள்ள கல்வாவில் ரவீந்திர முரளிதர் வர்மா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறைக்குள் நுழைய அனுமதி இருந்தது. மேலும் அவர் கடற்படை கப்பல்களில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறை அவரை நோட்டமிட்டது. அது அவர் மூலம் ஏதாவது தகவல்களை கறக்க முடியுமா என்று சதித்திட்டம் தீட்டியது.

அதற்காக பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் அவரிடம் பேஸ்புக் மூலம் பெண்ணைப் போன்று பேச தொடங்கினர். அவர்கள் விரித்த ஹனி டிராப் வலையில் முரளிதர் சிக்கினார். பெண்ணென்று நினைத்து பாகிஸ்தான் உளவுத்துறை இடம் வழிந்த அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் வரை பல்வேறு முக்கியமான தகவல்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த ரகசிய தகவல் பயங்கரவாத தடுப்பு படையினருக்கு கிடைத்தது. அதன்படி அதிகாரிகள் நேற்று முன்தினம் முரளிதரை பிடித்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது செல்ஃபோன் உள்ளிட்ட சாதனங்களை பயங்கரவாத தடுப்பு படையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.