
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோய் உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது. அதோடு எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இன்று பாஜகவினர் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில், காலை முதலே பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையை நோக்கி வரும் வழியில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, போராட்டம் செய்யும் போது குரல்வலையை நசுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காவல்துறைக்கு இதுதான் வேலையா?. இன்று அவர்கள் தடுக்கட்டும் அடுத்த முறை ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடைபெறும் எதை வேண்டுமானாலும் முற்றுகை செய்வோம். அதுவும் முதலமைச்சரின் வீடாக கூட இருக்கலாம். ஏனெனில் அவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரும் ஒரு குற்றவாளி தான் அவர் தப்பிச் செல்ல முடியாது. அவரது அமைச்சரவை அவரது கண்காணிப்பில் இருக்கும் ஒன்றாகும். ஒரு அமைச்சருக்கு மட்டும் அவர் அதிக அளவில் பாசத்தை காட்டி உள்ளார் என்று தெரிவித்தார். அதன் பின் போராட்டத்திற்காக சென்ற அவரை அக்கரை பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.