
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து அவ்வப்போது தனது எண்ணத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் நடந்து வரும் பணி கலாச்சாரத்தை தான் விரும்பவில்லை என்றும், அதனை விட்டு வெளியேறுவதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பான் இந்தியா படங்கள் குறித்து பேசினார்.
அது பற்றி அவர் கூறியதாவது, “பான் இந்தியா என்பது ஒரு மிகப்பெரிய மோசடி ஆகும். இதில் ஒரு படம் உருவாக்க 3 முதல் 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அதற்காக பலர் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அந்த படத்தினை சார்ந்து இருக்கிறார்கள். படம் தயாரிப்பதற்கு செலவிடப்படும் பணத்தைவிட படத்திற்காக செலவிடப்படும் பணம் அதிகம். ஏனென்றால் எதார்த்தமற்ற செட்டுகளில் பணம் செலவிடப்படுவதால், இறுதியில் ஒரு சதவீதம் வெற்றி மட்டுமே கிடைக்கிறது என்று கூறினார்.
அதோடு வெற்றி பெற்ற படங்களுக்கு பின்னால், சிலர் அதைப்போன்ற படங்களையே தயாரித்து வருகின்றனர். அதாவது “உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என்ற திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு எல்லோரும் தேசபக்தி திரைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்தனர். கே.ஜி எஃப் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அதுபோலவே படம் எடுக்க ஆரம்பித்தனர். அதன்பின் அதிரடி வெற்றி கொடுத்த “பாகுபலி” யை தொடர்ந்து நடிகர் பிரபாஸை வைத்து பெரிய படங்களை தயாரிக்க விரும்பினார்கள். எனவே ” அங்குதான் கதை சொல்லலில் சரிவு தொடங்குகிறது” என்று கூறியுள்ளார்.