
சென்னை ஈசிஆரில் நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை துரத்தி வந்த காரில் 4 இளைஞர்கள் இருந்துள்ளனர். இவர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அதில் இருந்து ஒரு இளைஞர் ஓடி வந்து பெண்களை மிரட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இச்சம்பவம் கடந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 7 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. சந்தோஷ், தமிழ் குமரன், அஸ்வின் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில், மற்ற 3 பேரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருவை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சந்துரு பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தான் எந்த கட்சியையும் சாராதவர் என்றும், தனது குடும்பத்தில் தான் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர் என்றும் சந்துரு கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் சுங்கச்சாவடிகளை கடப்பதற்காக திமுக கொடியை கட்டியதாகவும், தனக்கும் திமுகவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் சந்தோஷ என்பவர் தான் அந்த கொடியை கட்ட சொன்னதாகவும், வேறு காரை துரத்துவதற்கு பதிலாக அந்த காரை துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.