
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே ஹத்ராஸ் பகுதியில் உள்ள சேத்பூல் சந்த் பாக்லா முதுகலைக் கல்லூரியில் புவியியல் பேராசிரியராக பணியாற்றி வந்த ரஜ்னிஷ்குமார் (வயது 50) மீது, மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மற்றும் பலாத்காரம் செய்திருப்பதாக அதிர்ச்சிகரமான புகார்கள் எழுந்துள்ளன. திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. ஆனால், தனது அறையில் ரகசிய கேமரா பொருத்தி வைத்து, மாணவிகளை கட்டாயப்படுத்தி கற்பழித்ததும், அந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு முதலே மாணவியிடம் அதிக மதிப்பெண்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதாக ஆசைவார்த்தைகள் கூறி, தனது அறைக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாணவிகள் பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த நிலையில், அண்மையில் ஒரு மாணவி இத்தகவலை வெளிப்படுத்தியதோடு, அதற்கான ஆதார வீடியோக்களையும் வெளியிட்டார்.
பல ஆண்டுகளாக மாணவிகளை தவறான நோக்கத்தில் பயன்படுத்தி வந்த பேராசிரியர், மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் என்றும், வேலை வாய்ப்பு கிடைக்காது என்றும் மிரட்டல் விடுத்தது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ரஜ்னிஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு நடத்தி வரும் நிலையில் அடுத்தடுத்து இந்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் கல்வித்துறையையும், மாணவர்களுடைய பாதுகாப்பையும் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் இந்த பேராசிரியரின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.