
இன்றைய காலகட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விட டேட்டிங் செயலிகள் மோசடிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று குண்டூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? நாம் இருவரும் பேசலாமா? என ஆரம்பித்ததும், அந்த வாலிபர் சற்றும் யோசிக்காமல் டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து அந்த இளம் பெண்ணுடன் பேசத் தொடங்கியுள்ளார்.
தினம்தோறும் அரட்டை அடிப்பதையே வேலையாக வைத்துள்ளார். அடிக்கடி வீடியோ கால் மூலம் பேச்சு தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வது என இருவரும் நெருக்கமாகியுள்ளனர். அதன் பின் ஒரு நாள் அந்தப் பெண் தனது அப்பாவிற்கு விபத்து நடந்து விட்டதாகவும் தனக்கு பண உதவி தேவைப்படுகிறது எனவும் கேட்டுள்ளார்.
அதற்காக அந்த இளைஞர் தனது சொத்து ஆவணங்களை அடமானம் வைத்தும், சில நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியும் ரூபாய் 10 லட்சத்தை அந்தப் பெண்ணின் வங்கி கணக்குகளில் பல தவணைகளாக அனுப்பியுள்ளார். அதன் பின் அந்த இளம்பெண் அந்த இளைஞரை தொடர்பு கொள்வதை நிறுத்தியுள்ளார்.
தொடர்ந்து முயற்சித்தும் அந்த இளம் பெண் பதிலளிக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய சைபர் கிரைம் காவல்துறையினர் கூறியதாவது, டேட்டிங் செயலிகளில் மணிக்கணக்காக பேசி மயக்கி, கடைசியில் பண மோசடி செய்து விடுகின்றனர்.
இதுபோன்று மோசடி செய்வதற்கு மார்க்கெட்டிங் குழுவே உள்ளது. முதலில் அவர்கள் பேச ஆரம்பிப்பார்கள் படிப்படியாக வீடியோ கால் என முன்னேறி நிர்வாண அழைப்புகள் செய்து நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது வரை நீடிக்கும் அழைப்புகள், அதன் பின்னர் பகிரப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தியோ அல்லது விபத்து ஏற்பட்டது போல் ஏமாற்றியோ பணத்தை பறிக்கின்றனர். அதனால் டேட்டிங் செயலிகள் மூலம் இது போன்ற அழைப்புகள் வந்தால் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.