ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதலின்படி கடந்த 2023 ஆம் ஆண்டு 106 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீ அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் இலக்கியம் மற்றும் கல்வி பங்களிப்புக்கான பத்மஸ்ரீ விருது பட்டியலில் 56வது இடத்தை பெற்றிருந்தார். இதன்படி பத்திரிக்கையாளரான அந்தர்யாமி மிஸ்ரா டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இந்த நிலையில் அதே ஒடிசாவை சேர்ந்த மொழி இலக்கியவாதியும், டாக்டருமான அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் தனது பெயரில் விருது பரிந்துரைக்கப்பட்டதாகவும் தன்னைப்போல பெயர் கொண்டவர் ஆள்மாறாட்டம் செய்து விருதை பெற்றதாகவும் ஓடிசா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது, ஒடிசா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்கள் எழுதியுள்ளேன். இதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெறும் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றது. ஆனால் அந்த விருது தவறுதலாக பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எந்த இலக்கியப் பங்களிப்பும் செய்யவில்லை. விருது பெற்றவர் எந்த புத்தகமும் எழுதவில்லை. எனது பெயரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றுள்ளார் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு ஒடிசா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி,”மத்திய அரசின் பாதுகாப்பான சரிபார்ப்பு செயல்முறை நடைபெற்ற போதும்  ஒரே மாதிரியான பெயர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது அரசின் தேர்வு செயல்முறை நம்பகத்தன்மையை குறித்து கேள்வி எழுப்புகிறது. பத்மஸ்ரீ விருது யாருக்கு என்பதை உறுதிப்படுத்த தாங்கள் எழுதிய அனைத்து புத்தகங்கள் மற்றும் பொருட்களுடன் இருவரும் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும்” என இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.