
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக, கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பேனர்கள் கிழிக்கப்படும் அளவிற்கு போராட்டங்கள் நடந்துள்ளன. இதற்கிடையில், கர்நாடக அமைச்சர் சிவராஜ், கமலஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ‘தக் லைஃப்’ படத்தை தடை செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. கமல்ஹாசன் பேச்சை குறிப்பிட்டு ஒரு சிலர் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டு தவறான புரிதலை பரப்புகின்றனர்.
அதனால் தேவையற்ற சங்கடமான சூழலும் பதட்டமும் ஏற்படுகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துபவர் தான் நடிகர் கமல்ஹாசன் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.