
மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரான நிக்கோலஸ் பூரன் தனது 29-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட உரையில், “இந்த முடிவு எளிதானது அல்ல, ஆனால் நீண்ட யோசனைக்குப் பிறகு சர்வதேச அரங்கில் இருந்து விலகுவது என் முடிவாகும்,” என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
61 டி20 மற்றும் 106 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டு 4000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் பூரன். இந்தியன் பிரீமியர் லீக் 2025-இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்காக அபாரமாக விளையாடிய அவர், 14 போட்டிகளில் 524 ரன்கள் குவித்து ரசிகர்களை பரவசப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இன்னும் எட்டு மாதங்களில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாகவே அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய ஒவ்வொரு தருணமும் எனக்கு பெருமை. அந்த மெரூன் ஜெர்சி எனக்கு தான் என்று ஒரு உணர்வு. கேப்டனாக இருந்த அந்த நாள்கள் என்றும் என் மனதில் நிறைந்திருக்கும்,” என பூரன் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், “ரசிகர்களுக்கு என் நன்றி, எப்போதும் என்னை தூக்கி வைத்தீர்கள். என் குடும்பம், நண்பர்கள், சக வீரர்கள் உங்களுடைய ஆதரவுக்காக நன்றி,” என்றும் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் முழுக்க முழுக்க டி20 லீக்குகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கவுள்ள பூரன், ஐபிஎல் உள்ளிட்ட பிரபல லீக்குகளில் பங்கேற்று விளையாடவுள்ளார். லக்னோவால் ரூ.21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ள பூரன், தற்போது அதிக சம்பளமளிக்கப்படும் வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகிய பூரனின் முடிவு, அணிக்குள் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.