2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி (Miss World) போட்டியின் இறுதி சுற்று இன்று தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில் உள்ள HITEX மையத்தில் நடைபெற்றது. இதில் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா சுவாங்ஸ்ரீ உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின் உலக அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா பட்டம் வழங்கினார்.

போட்டியில் எத்தியோப்பியாவின் ஹாசெட் டெரெஜே முதல் ரன்னர்-அப்பாகவும், போலந்தைச் சேர்ந்த மஜா கிளாஜ்டா இரண்டாவது ரன்னர்-அப்பாகவும் தேர்வானார்கள். இந்தியாவை மாடல் நந்தினி குப்தா பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் முதல் 20 இடங்களுக்குள் வந்தார்.

தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல், சர்வதேச உறவுகள் படிக்கும் மாணவியும், மாடலும் ஆவார். 16 வயதில் மார்பகத்தில் கட்டி இருந்ததைக் கண்டறிந்து, அதைத் தூண்டுதலாக கொண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வில் தீவிரமாக ஈடுபட்டவர். ஏற்கனவே 2024-ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து பட்டத்தை வென்றார்.

அதன் பிறகு உலக அழகி போட்டிக்காக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பூமியின் 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகளிடையே போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர், நடிகர் சிரஞ்சீவி, ராணா டகுபதி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் சோனு சூட் நடுவராக கலந்து கொண்டு “மனிதாபிமான விருது” பெற்றார். முன்னாள் மிஸ் இங்கிலாந்து டாக்டர் கரினா டர்ரெல், சமூகத் தலைவி சுதா ரெட்டி, மற்றும் நிகழ்ச்சியின் தலைவர் ஜூலியா மோர்லி உள்ளிட்டோர் நடுவர் குழுவில் இருந்தனர். இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக அழகி போட்டியை நடத்துவதன் மூலம் உலக அரங்கில் தனக்கென ஒரு பெயரைப் பதித்துள்ளது.