ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது மனைவியுடன் சென்று வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மோனிகா தேவி நேற்று வீட்டின் பின்புறம் தனது 6 வயது மகளுடன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் குடத்தை வீட்டிற்குள் வைத்து விட்டு வருவதற்குள் வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் கத்தி கூச்சலிட்டார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சிறுமியை தொடர்ந்து தேடி வந்தனர். அந்த  சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்த கரைகளுடன் தேயிலைத் தோட்ட பகுதியில் கிடந்தது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 18 மணி நேரமாக 100-க்கும் மேற்பட்டோர் சிறுமியை தேடி வந்த நிலையில் தற்போது அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.