
தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறிய கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமல்ஹாசன், “தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என தெரிவித்தார்.
நடிகர் கமலின் பேச்சால் தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் மொழி குறித்து பேச நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா இல்லை வரலாற்று ஆய்வாளரா என கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக திரைப்பட சங்கத் தலைவருக்கு நடிகர் கமல் ஹாசன் கடிதம் அனுப்பியுள்ளார். கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பம் என்பதைதான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேனே தவிர, கன்னட மொழியையோ, மக்களையோ இழிவு படுத்தும் நோக்கத்தில் அல்ல என கூறியுள்ளார்.
‘தக் லைஃப்’ பட விழாவில் கமல் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி, அப்படத்துக்கு அங்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்ற முறையில் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார்.
