அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டபோது தன்னுடைய சொத்து விவரங்கள் தொடர்பாக தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் மீது மக்கள் பிரதிநிதி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யும்படி சேலம் மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த 22 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்ததோடு வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பான காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதல் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக மனு தொடர்ந்த மிலானி மற்றும் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.