சென்னை மாவட்டத்தில் பாஜக கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் தினத்தை நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முன்னாள் எம்.பி சரத்குமார், நயினார் நாகேந்திரன், எச். ராஜா ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் போது முன்னாள் எம்.பி சரத் குமார் உரையாற்றினார்.

இதில் அவர் கூறியதாவது, முதலில் சைக்கிளில் சென்று நியூஸ் பேப்பர் விநியோகம் செய்த நான், பின்னர்  பத்திரிக்கையாளராக இருந்து தற்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். ஏனென்றால் இதற்கு பின்னால் என்னுடைய கடுமையான உழைப்பு இருந்துள்ளது. மேலும் பல வெற்றிகளை காண வேண்டும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தேசியம் என்பது என் உடலில் இருந்து கொண்டே உள்ளது. தேசியம் என்பது சாதாரணமான ஒன்று கிடையாது.

இதனால்தான் எனது வலது தோள்பட்டையில் தேசியக் கொடியை பச்சை குத்தினேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் என்னை சிறிது வருத்தமடைய செய்தது. ஒருமுறை படப்பிடிப்பில் தேசியக்கொடி பச்சை குத்தியதை பார்த்த சிலர் நீங்கள் காங்கிரஸில் இணைந்து விட்டீர்களா? என கேட்டார்கள். அப்போதுதான் தேசிய கொடியை பச்சை குத்தியது எனக்கு சிறிய வருத்தத்தை அளித்தது. காங்கிரஸ் கட்சியிடம் மகாத்மா காந்தி ஏற்கனவே இந்த கொடியை மாற்றுமாறு சொல்லி இருக்கிறார். அதற்காக சரத்துக்குமார் கொடியை மாற்ற சொல்கிறார் என நினைக்க வேண்டாம். அதை காங்கிரஸ் கட்சியினரே மாற்றிக் கொள்வார்கள். இவ்வாறு நிகழ்ச்சியில் சரத்துகுமார் கூறினார்.