பெங்களூருவைச் சேர்ந்த மனிதவள நிபுணர் காயத்ரி கோபகுமார், சமீபத்தில் ஒரு ஆட்டோவில் பயணித்தபோது நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் பயணித்த ஆட்டோவின் ஓட்டுநர், ஒரு காலத்தில் ஐடி துறையில் பணிபுரிந்த சுரேந்திரா ஆர் என்பது தான் அந்த சம்பவத்தின் சிறப்பு.

அவர் தனது வாழ்க்கையின் திருப்பங்களை பகிர்ந்தபோது, காயத்ரிக்கும், பலருக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. சுரேந்திரா, கடந்த காலங்களில் பல பெரிய மென்பொருள் நிறுவனங்களில் மூத்த தர ஆய்வாளராகவும், குழுத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். அவரது திறமைகள் மற்றும் அனுபவத்திற்காக பெரும் அங்கீகாரமும் பெற்றிருந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், தனது வேலைவாய்ப்பை இழக்க நேர்ந்தது. குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டும் நபராக இருந்ததால், தனது குடும்பத்தை நடத்த ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்யத் துவங்கியிருக்கிறார்.

சுரேந்திரா தற்போது மீண்டும் தர உறுதி, செயல்பாட்டு ஆதரவு, பின் அலுவலக வேலைகள் போன்ற துறைகளில் வேலைக்கு திரும்ப விரும்புகிறார். இதற்காக, காயத்ரி அவரது கதையை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“இந்த ஆட்சி உணர்வு மிகுந்தது, அவர் எவ்வளவு தைரியமாக வாழ்க்கையை எதிர்கொண்டார் என்பதற்கு இது சான்று” என அவர் பதிவிட்டுள்ளார். மேலும், சுரேந்திராவை மீண்டும் கார்ப்பரேட் உலகில் கொண்டு சேர்க்க மக்கள் உதவ வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இக்கதையை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் சுரேந்திராவின் துணிச்சலுக்கு வணக்கம் தெரிவித்துள்ளனர். “அவருக்கு விரைவில் வேலை கிடைக்க நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்” என பலரும் பதில்கள் அளித்துள்ளனர்.

தொழில்நுட்பத்தில் அனுபவமிக்க ஒருவரை மீண்டும் வேலை வாய்ப்பிற்குள் கொண்டுவர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கை சமூகத்தில் பரவியுள்ளது.