
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பர்ஹல்கஞ்ச் பகுதியில் உள்ள செம்ரா குர்த் கிராமத்தில், 25 வயதான ஊர்மிளா கவுர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, தனது அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு உயிரிழந்தார்.
தற்கொலைக்கு முன்பு, கடைசியாக ஊர்மிளா ரஷ்யாவில் வேலை பார்த்து கொண்டிருந்த தனது கணவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், வாக்குவாதத்துக்குப் பிறகு தற்கொலை பற்றி கூறி அழைப்பை துண்டித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊர்மிளாவின் கணவர் அர்ஜுன், திருமணமான சில மாதங்களில் வேலைக்காக ரஷ்யா சென்றிருந்தார். அதனையடுத்து, ஊர்மிளா தனது 1 வயது மகளுடன், மாமியார் மற்றும் மாமனாருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக, தனது கணவரை வீடு திரும்புமாறு வற்புறுத்தி வந்த நிலையில், இருவருக்கும் இடையே தொடர்ச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் மனவேதனையில் அவர் முடிவெடுத்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்கொலை நேரத்தில், அவரது 1 வயது மகள் அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தெரிந்ததும், அவரது மாமியாரும், மாமனாரும் அறைக்குள் ஓடி வந்தபோது, ஊர்மிளா உயிரிழந்திருந்தார்.
உடனடியாக அவரது கணவர் அர்ஜுனுக்கு ரஷ்யாவிற்கு தகவல் அனுப்பப்பட்டது. குடும்பத்தில் அதிர்ச்சி நிலவி வரும் நிலையில், ஊர்மிளாவின் இறப்பு தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பர்ஹல்கஞ்ச் காவல் நிலைய அதிகாரி சந்திரபான் சிங் கூறியதாவது, “இது ஒரு தற்கொலை சம்பவமாகத் தோன்றுகிறது; உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். குழந்தையை தவிக்க விட்டு தாய் தவறான முடிவை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.