
“புஷ்பா 2” திரைப்படம் சுகுமார் இயக்கத்தில நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் காட்சி ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படத்தை பார்ப்பதற்காக ரேவதி(35) என்ற பெண் ஒருவர் தனது மகனுடன் தியேட்டருக்கு வந்துள்ளார். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் நடிகர் அல்லு அர்ஜுன் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் உள்ள ரேவதியின் மகன் ஸ்ரீதேஜாவும் சமீபத்தில் மூளைச்சாவடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து தெலுங்கானா காவல்துறையினர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இதில் அவர் தெரிவித்ததாவது, அரசியல் அல்லது சினிமா பிரபலமாக இருந்தால் கூட்டம் நெரிசல் ஏற்படுவது இயல்பானது தான். இது அவர்கள் குற்றமா?, நடிகை ஸ்ரீதேவியை படப்பிடிப்பின் போது பார்ப்பதற்காக வந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் பலியாகி உள்ளனர். அதற்காக தற்பொழுது தெலுங்கானா காவல்துறையினர் ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு செல்வார்களா? என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.