இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், ஜலந்தர்–மண்டி–அட்டாரி தேசிய நெடுஞ்சாலை  பகுதியில் இன்று அதிகாலை ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. சண்டிகரில் இருந்து பாசாஹிதர் ஜோகிந்தர்நகர் நோக்கி சென்ற டெம்போ டிராவலர், பட்சு தன்க் என்ற இடத்தில் திடீரென மலையிலிருந்து விழுந்த பாறைகளால் தாக்கப்பட்டு சாலையிலேயே கவிழ்ந்தது. இதில் பயணித்த 11 பேரும் நொடிப்பொழுதில் உயிர்தப்பினர்.

 

விபத்து நேரம் காலை 5.30 மணி. அந்த நேரத்தில் மலையிலிருந்து சாலையின் மீது பாறைகள் மற்றும் மணல் குவியலாக விழுந்தன. ஒரு பெரிய கல் டிராவலரின் டயரில் மோதியது. இதனால் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. பயணிகள் அலறியபடியே வாகனத்திலிருந்து வெளியேறினர். அதிர்ஷ்டவசமாக வாகனம் சாலையிலேயே கவிழ்ந்ததால், மலையிலிருந்து கீழே விழாமல் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் மூன்று பயணிகள் சிறிது காயங்களுடன் மீட்கப்பட்டு ஹுக்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், அந்த வழியாக வந்த ஒரு HRTC பேருந்தும் பாறைகளில் மோதாமல் தப்பியது. இந்த சம்பவம் குறித்து தரம்பூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, ஏ.எஸ்.ஐ பிரதீப் தாக்கூர் தலைமையில் போலீசார் விரைந்து சம்பவ இடத்தை பார்த்துவிட்டு, ஓட்டுநர் மற்றும் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நிலச்சரிவால் சாலையில் ஏற்பட்ட இடிபாடுகள் மற்றும் கற்களை அகற்ற ஜேசிபி உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு மாற்றுப்பாதை மூலம் பயணிகள் தங்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என தரம்பூர் டிஎஸ்பி சஞ்சீவ் சூட் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிக்காக மலை வெட்டப்பட்டதுதான் இந்த நிலச்சரிவுக்கு காரணமா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.