
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு சில நாட்களுக்கு முன் செல்போனில் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதனை எடுத்துப் பேசியபோது, மறுமுனையில் உள்ளவர் தன்னை மும்பையை சேர்ந்த காவல் அதிகாரி என கூறியுள்ளார்.
மேலும் ஆசிரியரின் பெயரில் பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும் அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதனால் மே 20 முதல் 30-ஆம் தேதி வரை 11 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகவும் கூறி மிரட்டியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் அந்த நபர் கூறியதை எல்லாம் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதற்காக சுமார் ரூபாய் 83 லட்சம் வரை பல வங்கிகணக்குகளுக்கு தவணைகளாக செலுத்தியுள்ளார். தனது ஓய்வு வாழ்க்கைக்காக சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் கொடுத்துள்ளார். இருப்பினும் கூடுதல் பணம் கேட்டு அந்த நபர் தொந்தரவு செய்ததால் ஆசிரியர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அதன் பின் தனது குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆசிரியரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.