
அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே 2ஆம் தேதி அன்று கொலை குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 104 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 1977 ஆம் ஆண்டு கௌசாம்பி மாவட்டத்தில் இரு குழுக்களிடையே நடந்த மோதலில் பிரபு சரோஜ் என்ற நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கில் லகான் மற்றும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின் 1982 ஆம் ஆண்டில் பிரயாக்ராஜ் பிரிவு நீதிமன்றத்தில் அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார். இதனை அடுத்து 4 குற்றவாளிகளும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மேல்முறையீட்டு செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போதே லகானுடன் இருந்த சக குற்றவாளிகள் மூன்று பேரும் இறந்துவிட்டனர். அதன் பின் நடந்த நீண்ட கால சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அலகாபாத் உயர்நீதிமன்றம் 43 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு லகானை நிரபராதி என தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
அதன்படி லகான் கடந்த செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அவரது சிறைச்சாலை பதிவுகளின்படி லகான் 1921 இல் பிறந்துள்ளார் தற்போது அவருக்கு 104 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.