மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் தரகேஸ்வர் ரயில்வே கொட்டகை அருகே பாட்டி அருகில் கொசுவலைக்குள் உறங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி ஒருவர், வெள்ளிக்கிழமை இரவு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, பாட்டியுடன் கட்டிலில் படுத்திருந்தபோது, குற்றவாளி கொசுவலையைக் கிழித்து உள்ளே புகுந்து குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காணாமல் போன சிறுமியைத் தீவிரமாகத் தேடியபோது, மறுநாள் சனிக்கிழமை பிற்பகலில் தரகேஸ்வர் ரயில் நிலைய வடிகால் அருகே சிறுமி நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுமியின் கன்னங்களில் கடி தடங்கள் இருந்ததாகவும், மர்ம உறுப்பில் இருந்து ரத்தம் வடிந்ததாகவும் பா.ஜ.க. நிர்வாகி பர்னா அடக் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு முதலில் தரகேஸ்வர் கிராமின் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சந்தன்நகர் துணைப் பிரிவுக் கோட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், பின்னர் காவல் நிலையம் சென்ற குடும்பத்தினரை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆளும் மம்தா பானர்ஜி அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கின் போலியான பிம்பத்தைப் பாதுகாக்கக் காவல்துறை குற்றத்தை மூடி மறைக்க முயல்வதாகவும், இது மம்தா பானர்ஜியின் தோல்வியுற்ற ஆட்சிக்கு அப்பட்டமான உதாரணம் என்றும் அவர் சாடியுள்ளார். இதற்கிடையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமந்து சின்ஹா ராய், குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை தொடர்பான குழப்பத்தால் முதலில் காவல் நிலையத்திலிருந்து வெளியேறியிருக்கலாம் என்றும், ரயில்வே காவல்துறையின் பாதுகாப்புக் குறைபாடுதான் இச்சம்பவத்திற்குக் காரணம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
