சட்டமன்றப் பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது, குடியாத்தம் தொகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சிந்து வலியுறுத்தினார்.

அவர் பேசுகையில், “குடியாத்தம் தொகுதியில் சுமார் 90 சதவீத அங்கன்வாடி மையங்கள் வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றன. இதனால் குழந்தைகளுக்கு முறையான வசதிகள் கிடைக்காத சூழல் உள்ளது. எனவே, அங்குள்ள அங்கன்வாடி மையங்களுக்கு அரசு சார்பில் சொந்தக் கட்டடங்களை விரைவாகக் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளிக்க எழுந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, சம்பந்தப்பட்ட கேள்விக்குரிய தரவுகளைப் வாசிப்பதற்குப் பதிலாக வேறு ஒரு புள்ளிவிவரத் தகவலை வாசிக்கத் தொடங்கினார். பின்னர் தனது தவறை உணர்ந்து பதிலளிக்க சிரமப்பட்ட நிலையில், பேரவைத் தலைவர் (சபாநாயகர்) குறுக்கிட்டு, “உறுப்பினரின் கோரிக்கையைக் குறிப்பெடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு” அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்துக் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஒரே விதமான பதில்களையே தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.