கே ஜி எஃப் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் பெண்களைச் சித்தரித்துள்ள விதம் குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், கன்னடத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை ரிஷிகா சிங் ‘டாக்சிக்’ டிரெய்லருக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கன்னட சினிமா உலகளவில் பிரம்மாண்டமாக வளர்ந்து வருவது தமக்கு மகிழ்ச்சியளித்தாலும், இந்தப் படத்தில் பெண்களைக் காட்டியுள்ள விதம் மிகவும் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
படத்தில் ஐந்து முன்னணி நடிகைகள் நடித்திருந்தும், அவர்கள் யாரையுமே கண்ணியமாகவோ அல்லது அழகாகவோ சித்தரிக்கவில்லை என்று அவர் சாடியுள்ளார். குறிப்பாக, பாலிவுட் பிரபல நடிகை கியாரா அத்வானியை அழைத்து வந்து இதுபோன்ற காட்சிகளில் காட்டுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் தனது வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நடிகர் யாஷிற்கு நேரடியாகக் கண்டனம் தெரிவித்த ரிஷிகா சிங், நிஜ வாழ்க்கையில் ஒரு குடும்பத் தலைவனாகவும் தந்தை பொறுப்பிலும் இருக்கும் யாஷ், பெண்களை மதிக்கும் வகையிலான கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
View this post on Instagram
“>
இறுதியாக, திரைப்படங்களில் பெண்களுக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறினால், நடிகர் யாஷை கர்நாடகாவை விட்டே வெளியேறச் செய்வோம் என்று நடிகை ரிஷிகா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளது கன்னடத் திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
