விலங்குகளுடன் நாம் செலவிடும் சிறு பொழுதும் நம் முகத்தில் புன்னங்கையை வரவழைக்கக் கூடியது. அப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அழகான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் அவர்கள், மீட்கப்பட்ட இரண்டு யானைகளைச் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு  பர்வீன் காஸ்வான் தனது எக்ஸ் (X) தளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘கஜராஜ்’ மற்றும் ‘தீஸ்தா ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு யானைகளுக்கு அவர் அன்போடு பழங்களை ஊட்டி விடுகிறார். இந்த இரண்டு யானைகளும் கடந்த காலத்தில் மிகவும் கடினமான சூழலில் தங்கள் குடும்பத்தை இழந்து தவித்தபோது மீட்கப்பட்டு, தற்போது ஒரு பாதுகாப்பான காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருபவை ஆகும்.

இந்த வீடியோவில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பர்வீன் காஸ்வான் அங்கு செல்லும்போதெல்லாம் இந்த யானைகள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கான ‘டோல் டாக்ஸ்’ போலப் பழங்களை உரிமையோடு பெற்றுக்கொள்கின்றன. சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்தி வரி வசூலிப்பதைப் போல அல்லாமல், மிகுந்த அன்போடும் பாசத்தோடும் தங்களுக்குரிய உணவைத் தும்பிக்கையால் கேட்டு வாங்கும் இந்த யானைகளின் குறும்புத்தனமான பாவனை பார்ப்போரை வியக்க வைக்கிறது.

இந்த அழகான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் யானைகளின் அமைதியான மற்றும் பாசமான சுபாவத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். பெற்றோரை இழந்த இந்த பிராணிகளுக்குத் தற்போது மனிதர்கள் அளிக்கும் அரவணைப்பும், அவற்றுடன் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் பிணைப்பும் பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது.