இந்திய ஹாக்கி அணியின் பாரம்பரியமான நீல நிற ஜெர்சிக்குப் பதிலாக காவி நிறத்தை மாற்றியமைத்துள்ள ஹாக்கி இந்தியாவின் முடிவுக்கு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீருடைகளை மாற்றுவதாலோ அல்லது வரலாற்றைத் திருத்துவதாலோ நாட்டின் உண்மையான குரலை மாற்றிவிட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள 2026 எப்ஐஎச் ஹாக்கி உலகக் கோப்பைக்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “அவர்கள் சீருடைகளை மாற்றினாலும் சரி அல்லது கல்விக்கொள்கை மூலம் வரலாற்றைத் திருத்த முயன்றாலும் சரி, அவர்களால் எதையும் மாற்ற முடியாது. நமது நாட்டின் இளைஞர்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். ஜந்தர் மந்தரில் கூடியிருந்த இளைஞர்கள் என்ன சொன்னார்கள் என்பதைக் கேட்டீர்கள். இதுதான் நாட்டின் குரல்” என்று தெரிவித்தார். மேலும், இந்த ஜெர்சி சர்ச்சையை தற்போதைய அரசியல் விவாதங்கள் மற்றும் கல்விக்கொள்கை தொடர்பான இளைஞர்களின் போராட்டங்களுடன் அவர் இணைத்துப் பேசியுள்ளார்.

 

பல தசாப்தங்களாக இந்திய ஹாக்கி அணியின் அடையாளமாகத் திகழ்ந்த நீல நிற உடைகளுக்குப் பதிலாக காவி நிறத்தை முதன்மை நிறமாக அறிவித்த இந்த முடிவு, நாடு முழுவதும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்திய ஹாக்கியின் அடையாளமாக நீல நிறம் பல ஆண்டுகளாக விளங்கி வருவதால் இந்த முடிவு “வெட்கக்கேடானது” என்று இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வீரன் ரஸ்குன்ஹா விமர்சித்திருந்தார். அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியது.

விளையாட்டுத் துறையைத் தாண்டி தற்போது இந்த விவகாரம் ஒரு பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய ஹாக்கி அணிக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்குவதாக ஆதரவாளர்கள் இதனைச் பேசி வருகின்றனர். உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில், ஹாக்கி இந்தியாவின் இந்த புதிய காவி நிற ஜெர்சி குறித்த விவாதம் தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.