உலகக் கால்பந்து ரசிகர்களின் இதயத் துடிப்பாக விளங்கும் பிரேசில் நாட்டின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் ஜூனியர், சர்வதேசப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விளையாட்டு உலகை உலுக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் 16-ஆவது சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த நார்வே அணிக்கு எதிராகப் பிரேசில் அணி களமிறங்கியது.

காயத்திலிருந்து மீண்டு தாமதமாக அணியில் இணைந்த நெய்மர் இப்போட்டியில் விளையாடிய போதிலும், பிரேசில் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, தொடர்ச்சியான காயங்கள் மற்றும் உடல் தகுதிச் சிக்கல்கள் காரணமாகத் தேசிய அணியிலிருந்து விலகும் இந்த முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளார்.

​தன் ஓய்வு குறித்துப் பேசிய நெய்மர் மிகவும் உருக்கமாக, “பிரேசில் தேசிய அணியுடனான எனது காலம் முடிந்துவிட்டது. நான் அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கி, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். பிரேசிலின் இந்த மஞ்சள் சட்டட்டிக்காக எப்போதும் எனது ரத்தத்தையும் உயிரையும் கொடுத்து மைதானத்தில் போராடினேன். ஆனால், தற்போது இந்த கட்டத்தில் இனிமேல் என்னால் தொடர முடியவில்லை” என்று கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.

நெய்மரின் இந்தத் திடீர் முடிவு, பிரேசில் அணி ஆதரவாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் சர்வதேச அளவில் காலடி எடுத்து வைத்தவர் நெய்மர்.

சுவாரசியமாக, அவர் தனது கடைசி உலகக்கோப்பைப் போட்டியையும் அதே மைதானத்திலேயே விளையாடி சர்வதேசக் களத்திற்கு விடைபெற்றுள்ளார். பிரேசில் தேசிய அணிக்காகச் சுமார் 130 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள நெய்மர், ஒட்டுமொத்தமாக 80 கோல்களை விளாசியுள்ளார். இதன் மூலம் கால்பந்து ஜாம்பவான் பெலேவின் 77 கோல்கள் என்ற நீண்டகால சாதனையை முறியடித்து, பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றைப் படைத்தார்.

​தமது 16 ஆண்டுகால சர்வதேசப் பயணத்தில் 80 கோல்கள் அடித்தது மட்டுமின்றி, 59 கோல்களுக்கு நேர்த்தியாக உதவியும் செய்துள்ளார் நெய்மர். மேலும் 2013-இல் ஃபிஃபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தையும் பிரேசிலுக்கு வென்று தந்து நாட்டின் புகழை உயர்த்தினார். தேசிய அணியில் இனி நெய்மரின் ஆட்டத்தைக் காண முடியாது என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருந்தாலும், உள்ளூர் கிளப் போட்டிகளில் அவர் தொடர்ந்து களமிறங்கித் தனது அபாரமான திறமையைக் காட்டுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.