இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்தில் உள்ள இளம் பெண் ஒருவரால் புதுவிதமான சர்ச்சையில் சிக்கியுள்ள வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதோடு, ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான இந்திய அணி இன்னும் தனது முதல் வெற்றிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

​நான்காவது டி20 போட்டிக்காக இந்திய அணி நாட்டிங்ஹாமில் இருந்து பிரிஸ்டல் நகருக்கு பேருந்தில் புறப்படத் தயாரான போது இந்த அதிரடி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்திற்கு அருகில் இந்திய வீரர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் மற்றும் செல்பிக்களைக் கேட்டுள்ளனர். அப்போது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒரு இளம் பெண் மீண்டும் புகைப்படம் எடுக்கக் கேட்டு அடம் பிடித்துள்ளார்.

அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் “ஸாரி” என்று கூறிவிட்டு நகர்ந்தபோதும், அந்தப் பெண் விடாமல் துரத்தி, “எனக்கு உன்னைத் தெரியும், நீ என்னை லைக் பண்றேன்னு எனக்குத் தெரியும்” என்று உரக்கக் கூச்சலிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பிப் பார்க்காமல் நேராகச் செல்ல, அருகில் இருந்த வைபவ் சூர்யவன்ஷி இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். மறுபுறம், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி இந்த இங்கிலாந்து தொடரில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஏற்கனவே அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என இழந்த இந்திய அணி, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து வென்றுள்ளது. இன்று 4-வது போட்டி நடைபெறவுள்ள சூழலில், அணியின் இந்தத் தொடர் தோல்விகளுக்கு நடுவே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த வைரல் வீடியோ விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.