கலிபோர்னியாவில் உள்ள ஒரு பிரபல ஃபிட்னஸ் கிளப் மற்றும் அதன் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் (Daycare), இரண்டு வயது கூட நிரம்பாத ஆண் குழந்தை ஒன்றை அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் கொடூரமாக தூக்கி வீசிய சம்பவம் சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊழியர், குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு கால்களுக்கு இடையே விறுவிறுப்பாகச் சுழற்றி, சுமார் 6 அடி உயரத்திற்கு மேல் தலைக்கு மேலாகக் காற்றில் வீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிடி நழுவியதில், அந்தக் குழந்தை தரையில் தலைகுப்புற விழுந்து பலத்த காயமடைந்து கதறி அழுதுள்ளது. மேலும், நிலைதடுமாறிய அந்த ஊழியரும் அந்தக் குழந்தையின் மீதே விழுந்துள்ளார்.

​இந்தக் கொடூர சம்பவத்தால் குழந்தைக்கு மூளையில் பலத்த காயமும் (Traumatic Brain Injury), கேட்கும் திறனில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் அந்த ‘தி பே கிளப் எல் செகுண்டோ’ (The Bay Club El Segundo) நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். விபத்து நடந்தவுடன் குழந்தைக்குச் சிறிய காயம் தான் என்று கூறி உண்மையை மறைக்க முயன்ற அந்த மையம், முறையான உரிமம் இன்றியும், விதிமுறைகளை மீறியும் இயங்கி வந்ததாகப் பெற்றோரின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய இடத்திலேயே இப்படி ஒரு அலட்சியமும் ஏமாற்று வேலையும் நடந்துள்ளது கலிபோர்னியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.