மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள சவல்கர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக  பணியாற்றி வருபவர் ராம்பாபு நிபோரியா. இவர், மணிஷ் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்குவதற்காகப் பகிரங்கமாக லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.

“ஒன்று சிறைக்குச் செல், இல்லையென்றால் பணத்தைக் கொடு” என்று அவர் அந்த நபரை மிரட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை அன்று சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய்ப் பரவியது.

இந்த லஞ்ச விவகாரம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் இதில் உடனடியாகத் தலையிட்டனர்.

மொரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர், லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் ராம்பாபு நிபோரியாவை உடனடியாகப் பணியிடை நீக்கம்  செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த முறைகேடு குறித்து அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். எனினும், இணையத்தில் வைரலாகி வரும் அந்த லஞ்ச வீடியோவின் நம்பகத்தன்மை இன்னும் தனியாக அதிகாரப்பூர்வமாக முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.