டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா ஓபன்’ சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது திடீரென மைதானத்திற்குள் குரங்கு ஒன்று புகுந்தது.

இதனால் சர்வதேச போட்டி சிறிது நேரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் விளையாட்டு அரங்கின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்துவதாகக் கூறி சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களும் விவாதங்களும் எழுந்தன.

இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவரும், அசாம் மாநில முதலமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – ஐடியா எக்ஸ்சேஞ்ச்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த சர்ச்சை குறித்துப் பேசினார்.

அப்போது அவர், இந்த விவகாரத்தைக் கடுமையான பாதுகாப்புத் தோல்வியாகப் பார்க்காமல், மிகவும் நகைச்சுவையான மற்றும் எதார்த்தமான முறையில் அணுகினார். இதுகுறித்து எழுந்த எதிர்ப்புகளை “அளவுக்கு மிஞ்சிய எதிர்வினை” என்று அவர் நிராகரித்தார்.

மேலும், டெல்லியில் குரங்குகள் வாழும் இயற்கை இடங்களை அழித்துத்தான் மனிதர்களாகிய நாம் கட்டிடங்களை எழுப்பியுள்ளோம் என்பதை நினைவூட்டிய அவர், “அடுத்த முறை போட்டி நடக்கும் போது குரங்கு வந்தால், பதற்றமடையாமல் அதற்கு ஒரு வாழைப்பழத்தைக் கொடுங்கள்” என்று கலகலப்பாகக் கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.