தொடர்ச்சியாக இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி, அனுபவம் குறைந்த அயர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்து படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகும், இந்திய அணியின் கேப்டனை மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, சூர்யகுமார் யாதவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, ஸ்ரேயஸ் ஐயரிடம் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதுவரை இந்தியாவுக்காக 1 டெஸ்ட், 37 ஒருநாள் மற்றும் 113 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மீண்டும் இந்திய அணிக்குள் திரும்புவது இனி கடினம் என்றே கருதப்படுகிறது.

 

அயர்லாந்து தொடரில் ஏற்பட்ட இந்த தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இதே நாளில் (ஜூன் 29, 2024) டி20 உலகக் கோப்பையை வென்று, 11 ஆண்டுகால ஐசிசி கோப்பைக்கான வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில், “விளையாட்டில் சில தருணங்கள் எப்போதும் நம்முடனேயே தங்கிவிடும்; இறுதிப்போட்டிக்கு முன்னும் பின்னும் நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கேப்டன் பதவி பறிப்பு மற்றும் அணியில் இருந்து நீக்கம் போன்ற கசப்பான சூழலுக்கு மத்தியில் சூர்யாவின் இந்த பழைய உலகக் கோப்பை வெற்றி நினைவுப் பதிவு ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.