ஈரானில் ஹிஜாப் அணியாமல், ஸ்லீவ்லெஸ் உடையில் இணையதளத்தில் நேரலையாகப் பாடி தனது கலைத்திறமையை வெளிப்படுத்திய பிரபல ஈரானியப் பெண் பாடகியான பரஸ்தூ அகமதி என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 74 கசையடிகள் வழங்கும் கடுமையான தண்டனையை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த 2024 டிசம்பரில், அவர் யூடியூப்பில் பதிவேற்றிய இசை நிகழ்ச்சி வீடியோவில் ஹிஜாப் அணியாமல் தேசபக்தி பாடலை பாடியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பல மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வைரலானது.

“>

இதனால் ஈரானின் கடுமையான இஸ்லாமிய சட்டங்களையும், பொது ஒழுக்க விதிகளையும் மீறி “இணையத்தில் ஆபாசமான மற்றும் ஒழுக்கமற்ற உள்ளடக்கத்தை” வெளியிட்டதாகக் கூறி, கோம் மாகாண குற்றவியல் நீதிமன்றம் இந்த கொடூரமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இப்பாடகியுடன் சேர்த்து அந்த இசை நிகழ்ச்சியை உருவாக்க உதவிய இசைக்கலைஞர்கள் மற்றும் தயாரிப்புக் குழுவினர் உள்ளிட்ட 8 நபர்களுக்கும் தலா 74 கசையடிகள், இரண்டு ஆண்டுகள் கலைச் செயல்பாடுகளில் ஈடுபடத் தடை மற்றும் இரண்டு ஆண்டுகள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஈரானில் பெண்கள் பொதுவெளியில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காக வழங்கப்பட்டுள்ள இத்தகைய மனிதாபிமானமற்ற தண்டனை உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஈரானில் பெண்களின் உரிமைகள், கருத்து சுதந்திரம் மற்றும் கலை சுதந்திரம் நசுக்கப்படுவதை உலக அரங்கில் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடையே கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.