டம்புள்ளாவில் நடைபெற்ற இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான திரில்லான சூப்பர் ஓவர் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தின் பரபரப்பு ஆட்டம் முடிந்த பிறகும் ஓயவில்லை. போட்டி முடிந்தவுடன் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இந்தியாவின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரர்களுடன் ஆக்ரோஷமாக மோதலில் ஈடுபட்டார். இருதரப்புக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சக வீரர்களும் நடுவர்களும் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வீரர்களுக்கு இடையேயான இந்த அநாகரீகமான மோதல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) நடத்தை விதிமுறை 2.12-ன் கீழ் குற்றமாக கருதப்படுகிறது. இது வீரர்களுக்கு இடையேயான தேவையற்ற உடல் ரீதியான மோதலைக் குறிக்கும் விதியாகும். போட்டி நடுவர் இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகிறார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், வைபவ் சூர்யவன்ஷிக்கு அபராதம், எச்சரிக்கை அல்லது ‘டிமெரிட்’ புள்ளிகள் தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது. சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் என்பதால், இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.