மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த நோயாளிகளை எதேச்சையாக கவனித்த ஒரு மருத்துவர், அங்கு அமர்ந்திருந்த ஒருவர் திடீரென மயக்கமடைவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே ஓடிச் சென்று அந்த நபரின் நாடித்துடிப்பைப் பரிசோதித்தபோது, இதயம் துடிப்பது நின்றிருப்பது தெரியவந்தது. ஒரு நொடி கூட தாமதிக்காமல், அந்த மருத்துவர் அங்கேயே அவருக்கு இதய மசாஜ் (CPR) செய்யத் தொடங்கியதோடு, அவசரக் குறியீடான ‘புளூ கோட்’ (Blue Code) கொடுத்து மற்ற ஊழியர்களையும் அழைத்தார்.

​செவிலியர்களின் உதவியுடன், நோயாளிக்குச் செய்யப்படும் முதலுதவி சிகிச்சையை ஒரு கணம் கூட நிறுத்தாமல், அப்படியே அவரைத் தூக்கிக் கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு ஓடினர். அந்த மருத்துவரின் அசாத்திய வேகம் மற்றும் விடாமுயற்சியால், மரணத்தின் வாசல் வரை சென்ற அந்த மனிதரின் உயிர் அற்புதமாக மீட்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் இருந்த கேமராக்களில் பதிவான இந்த வீடியோ, “கடவுள் மனித ரூபத்தில் வருவார்” என்பதற்குச் சாட்சியாக இணையத்தில் வைரலாகி வருகிறது.