குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள கக்வாட் பகுதியில் அமைந்துள்ள ‘ஹெவன் ரிசார்ட்டில்’ ஒரு கோரமான விபத்து நிகழ்ந்துள்ளது. 33 வயதான அஜய் ரத்தோடு என்பவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க இந்த ரிசார்ட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அஜய் திடீரென மயங்கி தண்ணீருக்குள் சரிந்து விழுந்தார்.

அவர் நீரில் மூழ்குவதை அருகில் இருந்தவர்கள் கவனித்தும், ஏதோ விளையாடுகிறார் என்று தவறாக நினைத்ததால் யாரும் உடனடியாகச் சென்று காப்பாற்ற முற்படவில்லை.

நீண்ட நேரமாகியும் அவர் எழாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷமாகச் சென்ற சுற்றுலா, வாலிபரின் மரணத்தில் முடிந்ததால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது.