திருப்பரங்குன்றம் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளராக இருந்த கார்த்திகேயன், அக்கட்சியிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் இன்று தன்னைத் தவெக-வில் இணைத்துக் கொண்டார்.
பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பின் போது பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை திமுக அரசு நிறை வேற்றத் தவறியதால், தான் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு திமுக ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றிய இவர், பின்னர் உட்கட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சிப் பணிகளில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்த நிலையில், தற்போது தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் இணைந்துள்ளார். மதுரையின் முக்கியப் பகுதியில் திமுக-வின் செல்வாக்கு மிக்க நிர்வாகியாக இருந்த ஒருவர் தவெக-வில் இணைந்திருப்பது, அப்பகுதி திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
