இந்திய ரயில்வேயின் பெட்டிப் பணியாளர் (coach attendant) ஒருவர், ஓடும் ரயிலில் இருந்து குப்பை நிரம்பிய பையைத் தூக்கி வெளியே வீசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரயில்வே துறையின் சுகாதாரம் மற்றும் குப்பை அகற்றும் நடைமுறைகள் குறித்துப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அபிஷேக் சிங் என்ற பயனர் வெளியிட்ட இந்த வீடியோ, நவம்பர் 4, 2025 அன்று சீல்டா-அஜ்மீர் எக்ஸ்பிரஸ் (12987) ரயிலில் கான்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்குப் பயணித்தபோது நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ரயில்வே ஊழியரிடம் இது தவறு என்று கூறியபோது, அதற்கு அவர் “நான் அதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமா?” என்று திமிராகப் பதிலளித்ததாகவும் அந்தப் பயணி குற்றம் சாட்டியுள்ளார்.
View this post on Instagram
இந்தச் சம்பவம் குறித்துப் புகார் வெளியானவுடன், இந்திய ரயில்வே உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு ரயில்வே, அந்த ரயில்வே ஊழியரான சஞ்சய் சிங் என்பவரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்கியதுடன், ரயில்வேயின் சுகாதாரப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்தின் மீதும் கடுமையான அபராதம் விதித்துள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ரயில்வே ஊழியர்களுக்குக் குப்பைகளை அதற்கான நிலையங்களில் மட்டுமே அப்புறப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலர், ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பொதுச் சுத்தம் மற்றும் பொறுப்புணர்வு குறித்துக் கேள்விகளை எழுப்பி, கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
