குஜராத் மாநிலம் ஜாம்நகர் நகரில், ஒரு கடைக்கு வெளியே சிறுமியிடம் தகாத நடத்தை காட்டிய முதியவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.30 மணியளவில் ஜாம்நகரின் அப்னா பஜார் பகுதியில் நடைபெற்றது.

அப்போது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்களை அந்த முதியவர் அழைத்து, அவர்களுடன் விளையாடுவது போல நடித்து, ஒரு சிறுமியை மடியில் அமர வைத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த செயல் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

 

சம்பவத்தை கவனித்த மற்றொரு சிறுவன், சிறுமியை அங்கிருந்து இழுத்துச் செல்ல முயன்றதுடன், பின்னர் அருகில் இருந்த இளைஞர் ஒருவர் தலையிட்டு சிறுமியை மீட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் கோபம் எழுந்தது. “நகரின் பாதுகாப்பு எங்கே?” என பலரும் கேள்வி எழுப்பினர். பொது மக்களின் எதிரொலியை அடுத்து, ஜாம்நகர் போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய முதியவரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.